என் வீட்டு முற்றத்திற்கு
தினம் வந்து போகும்
சிட்டுக்குருவி
என் கண் பார்த்து
பேசுகின்றது...!
... ... ... ....
குட்டி குட்டி
மழைத்துளிகளை
எனக்குள் தாங்கி
உருவமில்லா கடவுள்
சிலையாய் உருவான
ஒர் உணர்வு....!
என் ஆசைகளை
காட்சியாக்கி
மேகங்களின் அசைவில்
இசையெடுத்து
என் இதயத்துடிப்பில்
ஒளியெடுத்து
பூஜித்த உணர்வு
அது....!
சாதாரண ஒருவருக்கு
பரிசளிக்க விருப்பமின்றி
பவித்திரமாய்
எனக்குள்ளேயே பதுக்கி
வைத்த உணர்வு....!
இந்த அழகிய
புனிதத்தை
மதிக்கத் தெரிந்த
ஒருவன்
எங்கிருக்கப் போகின்றான்...!
நெஞ்சம் இரும்பானது
பக்குவம் கூடானது
உணர்வை இருக்கி
அறிவு பூட்டிக் கொண்டது
கசியவும் விடாமல்....!
சந்தோச பூக்களிலிருந்து
எழும்பி
பக்குவம் பூத்த
கண்களோடு
என் எதிர்கால
வாசத்தை
பேச்சிலே ஏந்தி
தாய்மையை
அசையும் கரங்களில்
சுரந்து வந்தான்
ஒருவன்.....,
நெஞ்சம் இளகி
பக்குவம் இன்னும்
பதமாகி
அறிவு திறந்து
புனித உணர்வுக்கு
வழிவிட்டது....!
உருவமற்ற சிலை
உருக்கொண்ட
ஆத்மாவானது...!
மேக இசை உயிர்பெற்றது
இரத்தத் துளிகளில்
மொட்டுக்கள்
மலர்ந்தன..!
"மேகா" என
செல்ல பெயர் சூட்டி
தீப்பொறியின் மென்மைக்குள்
ஒருவித மௌனம் சேர்த்து
மனதுக்குள் காதலனானான்....!
என்று......
என் கண்ணுக்குள்
காதலை தொற்ற செய்து
மிகுதியை தொடக்கி
எதிர்கால கனவுகளோடு
மேக காதலாய்
பறந்து சென்றது
சிட்டுக்குருவி....!
... ... ... ...
மீண்டும் வருமா
வந்து அதன் அன்பு
பேசுமா..
கசிகின்ற காதலோடு
காத்திருக்கின்றேன்.
-பிரியசகி-
2016.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக