சனி, 17 டிசம்பர், 2016

வகுப்பறை முதல் நாள்....

காற்றிலே வீசும்
பூ வாசம்
மழலைகளில் வீசும்
மொழி வாசம்....!

நட்சத்திரப் பூக்கள்
நிறைந்த வகுப்பறை,
ஒவ்வொருவரும்
பேச்சுப் பழகும்
செல்லக் கிளிகள்....!

மழை நீர் சேமித்த
செடி இலைகள்
அசைந்து ,
தானே தூவிய
பூத்தூரலாய்
சிட்டுகளின் குரலோசை....!

"வகுப்பறை முகாமைத்துவம்"
எனும் நூலில்
சிக்கிய சிலந்தியென நான்....!

கொதித்துப் பொங்கும்
பாலின் குதூகலம் அடங்க
உள் நுழைகிறேன்....!

சிறகு விரிக்க
எத்தனிக்கும் சிட்டுகளை
ஓரிடம் செதுக்கி
பதிப்பதில்தான்
கொஞ்சம் சஞ்சலப்பட்டு போனது
மனம்....!

"எங்கள் புது ஆசிரியை"
என செல்லமாய்
ஒட்டிக்கொண்ட 
பிஞ்சு உள்ளங்களில்
அழகாய் அப்பிக்கொண்டது
எனதுள்ளமும் தான்....!

இனி என் சந்தோசம்
பரவும் ஒரே இடம்...
நிரந்தர நிம்மதி உறங்கும்
இடம்
மழலைகளின் உள்ளம்
ஒன்றே.....!

....பிரியசகி....
2016.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக